Wednesday, January 6, 2016

நவக்கிரக வழிபாட்டு முறைகள்
நவக்கிரக தோஷம் நீங்க நவக்கிரக ஹோமம், பூஜை என்பன நடைபெறுகின்றன. ஆலயங்களில் நவக்கிரகங்களுக்கு தனிச் சந்நிதானம் அமைந்திருப்பதைக் காணலாம். தேர்ச்சிற்பம் போல் உருவாக்கப்பட்ட ஆலயத்தில், அல்லது சதுரமாக உருவாக்கப்பட்ட ஆலயத்தில் நடுநாயகமாக சூரியனும் எட்டுத்திக்குகளிலும் எட்டு கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்.
நவக்கிரகங்களுள் நடுநாயகமாக வீற்றிருப்பவர் சூரியன். இவரது சக்தியால் எல்லா கிரகங்களும் பூமியும் இயங்குகின்றன. சூரியனை முழு முதற் கடவுளாகக் கொண்ட சமயம் செளரம், வேதங்கள் சூரியனை பலவாறு போற்றித் துதிக்கின்றன. இருக்கு வேதத்தின் நடுநாயகமாகத் திகழும் காயத்திரி மந்திரம் சூரியனைப் போற்றித் துதிக்கின்றது.
சூரிய தோஷம் நீங்க:
ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் அனுஷ்டித்தல் சிறப்பானது. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வேளையில் கோதுமை, வெற்றிலை, பழம், பாக்கு இவற்றை சூரியனுக்கு முன்னே வைத்து முக்கூட்டெண்ணை (தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்பெண்ணெய்) விளக்கேற்றி வைத்து ஒன்பது முறை வலம் வந்து சிவப்பு நிறப்பூக்களால், அல்லது செந்தாமரைப் பூவினால் அர்ச்சனை செய்து சக்கரைச்சாதம் நைவேத்தியம் செய்தல் வேண்டும்.
சந்திர தோஷம் நீங்க:
திங்கட்கிழமைகளில் விரதம் அனுஷ்டித்தல் சிறப்பானது. திங்கட்கிழமை மாலை வேளையில் நெல், வெற்றிலை, பழம், பாக்கு இவற்றை சந்திரனுக்கு முன்னே வைத்து முக்கூட்டெண்ணெய் விளக்கேற்றி வைத்து ஒன்பது முறை வலம் வந்து வெள்ளை நிறப் பூக்களால் அர்ச்சனை செய்து நெய் கலந்த பாயசம் நைவேத்தியம் செய்தல் வேண்டும்.
செவ்வாய் தோஷம் நீங்க:
செவ்வாய்க்கிழமைகளில் விரதம் அனுஷ்டித்தல் சிறப்பானது. செவ்வாய்க்கிழமை மாலை வேளையில் துவரை, வெற்றிலை, பழம், பாக்கு இவற்றை செவ்வாய்க்கு முன்பாக வைத்து முக்கூட்டெண்ணெய் விளக்கேற்றி ஒன்பது முறை வலம் வந்து செண்பக பூவினால் அல்லது சிவப்பு நிற பூவினால் அர்ச்சனை செய்து வெண்ணெய் சேர்ந்த சாதம் நைவேத்தியம் செய்தல் வேண்டும்.
புதன் தோஷம் நீங்க:
புதன் கிழமைகளில், ஏகாதசி தினத்திலே விரதம் அனுஷ்டித்தல் சிறப்பானது. புதன் கிழமை இரவு வேளையில் பயறு, வெற்றிலை, பழம், பாக்கு இவற்றை புதனுக்கு முன்னே வைத்து முக்கூட்டெண்ணெய் விளக்கேற்றி ஒன்பது முறை வலம் வந்து வெண் காந்தள் பூவினால் அர்ச்சனை செய்து தயிர்ச் சாதம் நைவேத்தியம் செய்தல் வேண்டும்.
குரு தோஷம் நீங்க:
வியாழக்கிழமைகளில் விரதம் அனுஷ்டித்தல் சிறப்பானது. வியாழக்கிழமைகளில் கடலை, வெற்றிலை, பழம், பாக்கு இவற்றை வியாழனுக்கு முன்பாக வைத்து முக்கூட்டெண்ணை விளக்கேற்றி ஒன்பது முறை வலம் வந்து முல்லைப் பூவினால் அல்லது மஞ்சள் நிற பூவினால் அர்ச்சனை செய்து பாற்சாதம் நைவேத்தியம் செய்தல் வேண்டும்.
சுக்கிர தோஷம் நீங்க:
வெள்ளிக்கிழமைகளில் விரதம் அனுஷ்டித்தல் சிறப்பானது. வெள்ளிக்கிழமை இரவு அல்லது மாலை வேளையில் மொச்சை, வெற்றிலை, பழம், பாக்கு இவற்றை சுக்கிரனுக்கு முன்பாக வைத்து முக்கூட்டெண்ணெய் விளக்கேற்றி ஒன்பது முறை வலம் வந்து வெண்தாமரைப்பூ அல்லது நந்தியாவட்டை பூவினால் அர்ச்சனை செய்து நெய்ச்சாதம் நைவேத்தியம் செய்தல் வேண்டும்.
சனி தோஷம் நீங்க:
சனிக்கிழமைகளில் விரதம் அனுஷ்டித்தல் சிறப்பானது. பகல், மாலை வேளைகளில் எள்ளு, வெற்றிலை, பழம், பாக்கு இவற்றை சனிக்கு முன்பாக வைத்து முக்கூட்டெண்ணெய் விளக்கு அல்லது எள்ளை கறுப்புத் துணியில் பொட்டலமாக கட்டி நல்லெண்ணெய் விட்டு சிட்டி விளக்கேற்றி ஒன்பது முறை வலம் வந்து நீல நிற பூவினால் அர்ச்சனை செய்து எள்ளுச்சாதம் நைவேத்தியம் செய்தல் வேண்டும்.
ராகு தோஷம் நீங்க:
செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை விரதம் அனுஷ்டித்து ராகு காலத்தில் உழுந்து, வெற்றிலை, பழம் பாக்கு ஆகியவற்றை ராகுவுக்கு முன்பாக வைத்து முக்கூட்டெண்ணெய் விளக்கேற்றி ஒன்பது முறை வலம் வந்து மந்தாரைப் பூவினால் அர்ச்சனை செய்து உழுந்து சாதம் நைவேத்தியம் செய்தல் வேண்டும்.
கேது தோஷம் நீங்க:
வெள்ளிக்கிழமை விரதம் அனுஷ்டித்து கொள்ளு, வெற்றிலை, பழம், பாக்கு இவற்றை கேதுவுக்கு முன்பாக வைத்து முக்கூட்டெண்ணை விளக்கேற்றி ஒன்பது முறை வலம் வந்து பலநிற பூக்களால் அர்ச்சனை செய்து புளிச்சாதம் நைவேத்தியம் செய்தல் வேண்டும்.
நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் உள சுத்தியுடன் ஒன்பது கிழமைகள் மேற்குறித்த நியமங்களுக்கேற்ப விரதம் இருந்து வழிபாடாற்றினால் அவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷம் நீங்குவதுடன் நோய்கள், சுபகாரியத் தடைகள், காரிய சித்தியின்மை நீங்கி பெருவாழ்வு கிடைக்கும்.
சூரிய வழிபாட்டால் - காரிய சித்தியும்
சந்திர வழிபாட்டால் - சர்வ பலன்களும்
செவ்வாய் வழிபாட்டால் - ராஜவசீகரமும்
புதன் வழிபாட்டால் - புஷ்டிவிருத்தியும்
குரு வழிபாட்டால் - செல்வவிருத்தியும்
சுக்கிர வழிபாட்டால் - தேஜஸ்விருத்தியும்
சனி வழிபாட்டால் - மோட்சமும்
ராகு வழிபாட்டால் -
மக்கட் செல்வமும்
கேது வழிபாட்டால் - ஆயுள் விருத்தியும் கிடைக்கும்
எலும்பு சம்பந்தமான நோய் உள்ளவர்கள் - சூரியனையும்
இரத்த சம்பந்தமான நோய் உள்ளவர்கள் - சந்திரனையும்
மூளை சம்பந்தமான நோய் உள்ளவர்கள் - செவ்வாயையும்
தோல் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் - புதனையும்
தசை சம்பந்தமான நோய் உள்ளவர்கள் - குருவையும்
சுக்கில - சுரோனித சம்பந்தமான நோய் உள்ளவர்கள் - சுக்கிரனையும்
நரம்பு சம்பந்தமான நோய் உள்ளவர்கள் - சனியையும்
குடல் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் - கேதுவையும்
வழிபட்டு வந்தால் அவர்களின் நோய் நீங்கி சகல செல்வம் பெற்று வாழ முடியும்.

No comments:

Post a Comment