ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர், அவரது தாத்தா காலத்திலேயே தமிழகத்தின் சேலம் நகருக்கு குடிபெயர்ந்த வியாபார குடும்பத்தை சேர்ந்தவர் பியூஷ் மனுஷ். தனது சாதிப் பெயரை துறந்து மனிதத்தை குறிக்கும் 'மனுஷ்' என்ற பெயரை சேர்த்துக் கொண்டவர். பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சேலத்தில்தான். 2010ம் ஆண்டு அவரை போல் சில சூழலியல் நண்பர்களுடன் கரம் கோர்த்து Salem Citizen's forum எனும் இயக்கத்தை தொடங்கினார்.
தர்மபுரியின் கஞ்சமலையில், நடந்து வந்த சட்டவிரோத சுரங்க தொழிலை எதிர்த்து, கூட்டுறவு காடுகள் திட்டத்தை தொடங்கி, 100 ஏக்கரில், ஒரு லட்சத்தி முப்பதாயிரம் மரக்கன்றுகளை நட்டு ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார்.
இவரின் கடின உழைப்பின் பலனாக உருவான அக்காட்டில் 8 குளங்கள், 2 ஏரிகள், 17 தடுப்பணைகள் உள்ளது என்பது வியக்கவைக்கிறது. மேலும் அதில் மூங்கில், தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு போன்ற இயற்கையை சுரண்டாத வகையிலான தொழில்களை உருவாக்கி இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார்.
கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரியினை அரசாங்கத்தின் எந்த ஒரு நிதி உதவியுமின்றி பொது மக்களை ஒன்றிணைத்து 50 லட்சம் செலவில் மீட்டெடுத்து இன்று அந்த பகுதி மக்களுக்கான நீராதாமாய் மாற்றியுள்ளார்.
சென்னை, கடலூர் வெள்ள சேதத்திற்கு சேலம் மக்களை ஒன்று திரட்டி 35 கண்டைனர் முழுக்க தேவையான பொருட்களை சேலம் மக்களிடம் பெற்று சென்னைக்கும் கடலூருக்கும் இரவு, பகல் பாராமல் அனுப்பிவைத்து கொண்டிருந்தது பியூஸ் மற்றும் சேலம் மக்கள் குழுவினர்.
சேலத்தில் நீர் பிடிப்பு மழைகளான கவுத்திமலை, கல்வராயன் மலையின் கீழ் இரும்பு இருப்பதை கண்டு, அந்த மலைகளை தகர்த்து எரிந்து விட்டு அடியில் இருக்கும் இரும்பை எடுக்க முயன்ற ஜிண்டால் நிறுவனத்தை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர். இவரின் அரிய பணிக்காக 2015ம் ஆண்டிற்கான CNN-IBN Indian of the year என்ற விருதை பெற்றுள்ளார்.
சேலத்தில் இதுவரையில் நான்கு ஏரிகள்(மூக்கனேரி, அம்மாபேட்டை, குண்டுகள் ஏரி, இஸ்மாயில்கான் ஏரி), இரண்டு தெப்பக்குளங்களை (அரிசிப்பாளையம், பள்ளப்பட்டி) அழிவில் இருந்து மீட்டெடுத்து இன்று அந்த பகுதியின் முக்கியமான நீர் ஆதாரமாக மாற்றியது பியூஸ் மற்றும் சேலம் மக்கள் குழு.
வினுப்பிரியா தற்கொலை சமயத்தில், போலீசாரின் பொறுப்பின்மையால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, சேலம் எஸ்.பி. அமித்குமார் சிங்கை பொதுமக்கள் முன்னிலையில் பியூஷ் மன்னிப்பு கேட்கவைத்தார்.
No comments:
Post a Comment