அசைவ உணவுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்தது மீன் உணவு. மீன் வறுவலைவிட குழம்புக்கு ருசி அதிகம். அதுவும் முதல் நாள் இரவு வைத்த மீன் குழம்பை மறு நாள் காலை டிபனுக்குத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவதற்கு இணையே இல்லை. சுவையான சால மீன் குழம்பு செய்யக் கற்றுத் தருகிறார் டாரிஸ் தாசைய்யா. வெங்காயம் சேர்க்காமல் செய்யப்படுவதுதான் இந்தக் குழம்பின் சிறப்பு.
என்னென்ன தேவை?
சால மீன் - அரை கிலோ
புளி - எலுமிச்சை அளவு
மல்லிப் பொடி- 2டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1டீஸ்பூன்
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
கடுகு, வெந்தயம், உளுந்து - சிறிதளவு
மசாலா அரைக்க
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
பெரிய பூண்டு - 5 பல்
தேங்காய் - 2 கீற்று
தக்காளி - 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு.
எப்படிச் செய்வது?
மீனைச் சுத்தம் செய்து அதோடு கெட்டியான புளிக்கரைசல், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அரை மணிநேரம் ஊறவைக்க வேண்டும். தேங்காய், பூண்டு, சீரகம், சோம்பு, தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து, புளிக்கரைசலுடன் சேர்க்க வேண்டும்.
வாணலியில் தேவைக்கேற்ப நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். அதில் குழம்பு கரைசலைச் சேர்த்து, நன்கு கொதிக்கவிடவும். மீன் வெந்ததும் இறக்கி, சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு: டாரிஸ் தாசைய்யா